ராஜிவ் கொலையில் தொடர்பில்லை : புலிகள் பெயரில் மறுப்பு அறிக்கை

புதுடெல்லி: ‘இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலைக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை,’ என்று விடுதலைப் புலிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசுகையில், ‘முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம். மேலும், வரலாறு திரும்ப எழுதப்படும்,’ என்று பேசினார். அது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ராஜிவ் காந்தி படுகொலையை விடுதலைப் புலிகள் நிகழ்த்தியதாக பொருள்படும்படி அவர் கூறியதாக இந்த சர்ச்சை எழுந்தது. அவரது பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமின்றி, தமிழின உணர்வாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜிவ் படுகொலை சம்பவத்தின் போதே, தங்கள் மீதான குற்றச்சாட்டை விடுதலைப்புலிகள் தீவிரமாக மறுத்து வந்தனர். ‘அது ஒரு துன்பியல் சம்பவம்’ என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், லதன் சுந்தரலிங்கம், குருபரன் சாமி என்பவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள், ‘இந்திய தலைமையை சீர்குலைக்கும் திட்டமோ, இந்தியாவை தாக்கும் திட்டமோ என்றுமே புலிகளிடம் இருந்தது இல்லை. இலங்கையைச் சார்ந்த எந்தவொரு நபருக்கோ, தலைவருக்கோ, எதிராக நாங்கள் ஒருபோதும் ஆயுதம் ஏந்தவுமில்லை. திட்டம் தீட்டவும் இல்லை. குறிப்பாக, எந்தவொரு இந்திய தேசியத் தலைவருக்கும் எதிராக செயல்பட நாங்கள் எப்போதும் எண்ணியதில்லை. நாங்கள் ஆயுதம் ஏந்துவதை நிறுத்தி 10 வருடங்கள் ஆன பிறகும் கூட புலிகளையும், தமிழீழ மக்களையும் ராஜிவ் காந்தி கொலையுடன் தொடர்புபடுத்தி பேசி வருவதை காணும்பொழுது இந்த கொலை தமிழீழ மக்களை அழிக்கச் செய்யப்பட்ட சதித் திட்டமாகத்தான் தோன்றுகிறது,’ என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: