புதுடெல்லி: ‘இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலைக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை,’ என்று விடுதலைப் புலிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசுகையில், ‘முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம். மேலும், வரலாறு திரும்ப எழுதப்படும்,’ என்று பேசினார். அது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ராஜிவ் காந்தி படுகொலையை விடுதலைப் புலிகள் நிகழ்த்தியதாக பொருள்படும்படி அவர் கூறியதாக இந்த சர்ச்சை எழுந்தது. அவரது பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமின்றி, தமிழின உணர்வாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜிவ் படுகொலை சம்பவத்தின் போதே, தங்கள் மீதான குற்றச்சாட்டை விடுதலைப்புலிகள் தீவிரமாக மறுத்து வந்தனர். ‘அது ஒரு துன்பியல் சம்பவம்’ என்று அவர்கள் தெரிவித்தனர்.