×

புதையலை கேட்டு டிரைவர் கடத்தல் பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் : உதவிய 2 போலீசார் மீதும் நடவடிக்கை

கருங்கல்: குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜெர்லின் (26). இவர் ரீத்தாபுரம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ஜேசிபி டிரைவராக இருந்தார். இவரிடம் திடீரென பண புழக்கம் அதிகரித்தது. கடந்த 6 மாதத்தில் ஒரு வீடு கட்டி, 2 கார் வாங்கி தங்கசெயின், மோதிரத்துடன் நடமாடி உள்ளார். ஜே.சி.பி. தோண்ட சென்ற இடத்தில் தங்க புதையல் கிடைத்ததே, காரணம் என தகவல் பரவியது.
இதனிடையே, கடந்த வாரம் ஒரு கும்பல் இவரை காரில் கடத்தியது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டுக்கு கொண்டு சென்று, தங்க புதையல் கிடைத்ததா என்று கேட்டு மிரட்டி வெற்று பத்திரங்களில் கையெழுத்து வாங்கினர். மேலும் அவரின் இரு கார்கள், 5 பவுன் செயின் ஆகியவற்றை பறித்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து தப்பி வந்த ஜெர்லின், குளச்சல் ஏ.எஸ்.பி. கார்த்திக்கிடம் புகார் அளித்தார். தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி உதயமார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ஜெகன் என்ற ஜெயராஜன், கடமலைக்குன்று பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குபதிவு செய்தனர்.  இவர்களில் சுரேஷ்குமார், ஜெயன்ராபி, கிருஷ்ணகுமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். சுரேஷ்குமார், நாகர்கோவிலில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக உள்ளார். கைதான 3 பேரிடம் நடத்திய விசாரணையில் மனைவியை பிரிந்து வாழும் ஆசிரியர் சுரேஷ்குமாருடன் இன்ஸ்பெக்டர் பொன்தேவி நெருக்கமாக இருந்த தகவல் வெளியானது. சுரேஷ்குமாரின் நண்பர்தான் கடத்தப்பட்ட ஜெர்லின்.

தன்னிடம் பணம் இருக்கும் தகவலை சுரேஷ்குமாரிடம் ஜெர்லின் தெரிவித்துள்ளார். இதையடுத்து பணத்தை பறிக்க ஜெர்லினை கடத்தியுள்ளனர்.
இதற்கு இன்ஸ்பெக்டர் பொன்தேவியும் 2 போலீஸ்காரர்களும் உடந்தையாக இருந்துள்ளனர். பணத்தை தர ஜெர்லின் மறுத்ததால், ஆத்திரமடைந்து ஆசிரியர் சுரேஷ்குமாரிடம் 50 லட்சம் கடன் வாங்கியதுபோல் பத்திரங்களில் எழுதி வாங்கி உள்ளனர். இதையடுத்து, கருங்கல் இன்ஸ்பெக்டர் பொன்தேவி, சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் ரூபன் ஜெயதிலக், போலீஸ்காரர் ஜோன்ஸ்  ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை டி.ஐ.ஜி. அபினவ் பிறப்பித்தார்.


Tags : Driver Abduction Woman Inspector ,Treasurer , Driver Abduction, Woman Inspector Suspended
× RELATED திமுக, அதிமுக, பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி...