×

இந்தியாவிலிருந்து கர்தார்பூர் வரும் சீக்கியர்களிடம் 20 டாலர் நுழைவு கட்டணம் வசூலிக்க பாகிஸ்தான் முடிவு என தகவல்

இஸ்லாமாபாத்: இந்தியாவிலிருந்து கர்தார்பூர் வரும் சீக்கியர்களிடம் 20 டாலர் நுழைவு கட்டணமாக வசூலிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு  நானக் தேவ், கடைசிக் காலத்தில் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில்  வசித்தார். அவரது நினைவாக, சர்வதேச எல்லையில் இருந்து சுமார் 3 கி.மீ.  தொலைவில் ரவி நதிக்கரையில் தர்பார் சாகிப் குருத்வாரா அமைக்கப்பட்டது. இந்த சமாதிக்கு செல்வதை சீக்கியர்கள் மிகவும் புனிதமாக கருதுகின்றனர். குருநானக்கின் 550வது பிறந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது.

இப்புனித இடத்திற்கு இந்தியாவில் இருந்து சீக்கியர்கள் எளிதாக செல்லும் வகையில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தேரா பாபா நானக் நகரிலிருந்து சர்வதேச எல்லை வரை சிறப்பு பாதை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதனையடுத்து பாகிஸ்தான் எல்லையிலிருந்து கர்தார்பூர் வரை சாலை அமைக்க பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்தது. கர்தார்பூர் சாஹிப்புக்கு சீக்கியர்கள் விசா இல்லாமல் செல்லவும் இரு நாடுகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தினமும் இந்தியாவிலிருந்து 5000 சீக்கியர்கள் இந்த பாதையில் விசா இல்லாமல் செல்ல அனுமதிக்கப்படுவர் எனவும் கூறப்பட்டது.

இதனிடையே நவ. 9-ல் இந்திய சீக்கியர்களுக்காக கர்தார்பூர் பாதை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலிருந்து வரும் சீக்கியர்களிடம் தலா 20 டாலர் நுழைவு கட்டணமாக வசூலிக்க பாக். அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான வரைவு அறிக்கையையும் ஹைகமிஷன் வாயிலாக இந்தியாவிடம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் பாக். அனுப்பிய வரைவு திட்ட அறிக்கைக்கு இந்தியா பதில் அளிக்காமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Tags : Pakistani ,India ,Sikhs , India, Gardarpur, Entrance Fee, Pakistan
× RELATED ஆப்கானில் பாக். குண்டு மழை 8 பேர் பலி