தொடங்கியது வடகிழக்கு பருவமழை!...டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தமிழகம், புதுவை, கேரளா, கர்நாடகா, தெற்கு ஆந்திரா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பரவலாக மழை

கேரளாவில் கடந்த ஜூன் மாதம் பெய்யத் தொடங்கிய தென் மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்திலும் பரவலாக  மழை பெய்தது. இருப்பினும் தமிழகத்தில் நிலவிய வெயிலால் வெப்ப சலனம் ஏற்பட்டு பரவலாக  மழை பெய்தது. சில  இடங்களில் இயல்பை மீறிய மழையும், சில இடங்களில் இயல்பைவிட குறைவான மழையும் பெய்துள்ளது. அதே நேரத்தில் வெப்ப சலனம் நீடித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் அதிகபட்ச வெயில் கொளுத்திய நிலையில்  தற்போது மீண்டும் வெப்ப சலனம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடியில் நல்ல மழை பெய்துள்ளது. இதனிடையே, கேரளாவில் பெய்து வந்த தென் மேற்கு பருவ மழை இன்றுடன் விடை பெற உள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

இந்நிலையில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றே தெற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா  பகுதிகளில் வட கிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அவர், தென் இந்தியாவில் கிழக்கு திசையில் இருந்து ஈரப்பதம் மிக்க காற்று வீசுவதை அடுத்து பருவமழை தொடங்கி உள்ளதாக விளக்கம் அளித்தார்.

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலான இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னையில் இரு தினங்களுக்கு அநேக இடங்களில் இடைவெளி விட்டு மழை பெய்யும் என்றும் கூறினார். மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் நாகை, தஞ்சை திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களிலும் திருவள்ளூர், காஞ்சி, கடலூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் பாலச் சந்திரன் கூறினார்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

வருகிற 17,18 ஆகிய தேதிகளில் குமரி, மாலத்தீவு கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும்  

எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொண்டுள்ளதால், கடலில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்ற தகவலை அடுத்து முக்கிய துறைமுகங்களில்  எச்சரிக்கை கூண்டு 1, 2 ஏற்றப்பட்டுள்ளன.

அதிகபட்ச மழைப்பதிவு

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் 11 செ.மீ. மழையும், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 10 செ.மீ. மழையும், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் ஆயிக்குடியில் தலா 9 செ.மீ. மழையும் [பதிவாகியுள்ளது. 

Related Stories: