2 ஆண்டுகளுக்கு முன்பே அரசாணை வெளியீடு: தனியார் ரயில்கள் இயக்க வசதியாக ரயில் வளர்ச்சி ஆணையம் கட்டமைப்பு

நாடுமுழுவதும் தினசரி ஓடும் 13 ஆயிரம் ரயில்களில் அதிகம் லாபம் தரும் 150 முக்கிய ரயில்களை தனியார்கள் வசம் ஒப்படைத்து அதன் மூலம் சுமார் ரூ.20 ஆயிரம் கோடி நிதி திரட்ட ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டு இருக்கிறது. இதற்கான ஒப்பந்த ஷரத்துகளில் கண்காணிப்பு, கட்டண நிர்ணயம், ரயில்கள் நேரம், மத்தியஸ்தம் போன்ற பல அம்சங்களுடன் அதனை கையாளும் அதிகாரக்குழு விவரங்களையும் இணைக்க வேண்டும்.

இந்த குழு அமைக்க கடந்த 2017 ஏப்ரல் 5ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்து, அதே ஆண்டு மே 8ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த குழுதான் ரயில் வளர்ச்சி ஆணையம் என்று அழைக்கப்படுகிறது. ரயில் கட்டண நிர்ணயம் மற்றும் முதலீட்டாளர்கள் ரயில்வேக்கு செலுத்த வேண்டிய தண்டவாள மதிப்பீடு கட்டணம் தீர்மானிக்க ஒரு “போக்குவரத்து உறுப்பினர்”, ஒப்பந்த சலுகை, முதலீட்டாளர் மூலதனம் தொடர்பான தாவாக்கள் தீர்க்க ஒரு “பொது தனியார் பங்களிப்பு உறுப்பினர்”, தரம், சேவை கண்காணிக்க ஒரு “திறமை தரம் மற்றும் அளவுகோல் உறுப்பினர்”, இது தவிர ஒரு தலைவர் இந்த ஆணையத்தில் இடம் பெறுவார்கள்.

சமூக தேவைகளுக்கான மூத்த குடிமக்கள், உடல் ஊனமுற்றோர், நோயாளிகள் சலுகைகள், புறநகர் ரயில்கள், மூங்கில், காகிதம், பழங்கள் போன்ற சில சரக்குகளுக்கான மான்யம் தொடர்பான கொள்கை வரையறுக்கும் அதிகாரம் இந்த ஆணையத்திற்கு உண்டு. முதலீட்டாளர்கள் இடையேயும், முதலீட்டாளர்கள் மற்றும் ரயில்வே இடையேயும் இது மத்தியஸ்தராக செயல்படும். மேலும் தரமான சேவைகளை உறுதிப்படுத்தி உபயோகிப்பாளர்கள் நலன்கள் பாதுகாப்பதும், ரயில் இயக்குனர்கள் இடையே போட்டி, தகுதி, பொருளாதாரம் மேம்படுத்துவதும் ஆணையத்தின் நோக்கம் என்று அரசாணை கூறுகிறது. உயர் மட்ட செயலாளர்கள் அடங்கிய தேர்வுகுழு இந்த ஆணையத்திற்கு உறுப்பினர்களை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரைக்கும்.

அந்த தேர்வுக்குழுவில் கேபினட் செயலாளர், ரயில்வே வாரிய சேர்மன், மற்றும் மத்திய அரசின் ஏதாவது ஒரு ஒழுங்கு முறை ஆணையத்தின் தலைவர் இடம் பெறுவார். நிதி அயோக் தலைவர் வேண்டுகோள்படி செயலாளர்கள் மட்டக் குழு உருவாக்கப்பட்டு இருப்பதாக வெளிவரும் செய்திகள் ரயில் வளர்ச்சி ஆணையம் கட்டமைக்கப்பட இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. இந்த ஆணையம் வசம் பயண கட்டண நிர்ணய அதிகாரம் கைமாறும். நடப்பு பயணச்சலுகைகள் ஆய்வுக்கு உள்ளாகும். அரசு ரயில்களை விட தனியார் ரயில்கள் இயக்க நேரங்களில் முன்னுரிமை பெறும். தனியார் ரயில்கள் திட்டத்திற்காக ரயில் வளர்ச்சி ஆணையம் கட்டமைக்கப்படுகிறது. இதை தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் கடுமையாக எதிர்ப்பதாக மாநில துணை பொதுச்செயலாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: