சிவகங்கை: சிவகங்கை வழியாக சென்னை செல்ல கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை ரயில்வே ஸ்டேசன் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இவ்வழியே இருந்த மீட்டர் கேஜ் பாதை அகற்றப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டது. சிவகங்கையிலிருந்து சென்னை, திருச்சி, மன்னார்குடி, விருதுநகர், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கோவை, புதுச்சேரி, புவனேஸ்வர், வாரணாசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னைக்கு தினந்தோறும் இரவு 7.45 மணிக்கு ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், 10.45 மணிக்கு சேது எக்ஸ்பிரஸ் என இரண்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன. வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இரவு 8.45 மணிக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் சென்னைக்கு இயக்கப்படுகிறது. ராமேஸ்வரம் மற்றும் சேது எக்ஸ்பிரஸ் இராமேஸ்வரத்திலிருந்தும், சிலம்பு எக்ஸ்பிரஸ் மானாமதுரையிலிருந்தும் சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக சென்னை செல்கிறது. தற்போது சிவகங்கையிலுள்ள ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னை செல்ல ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஆனால் தினந்தோறும் இரண்டு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுவதால் எல்லா நாட்களிலும் டிக்கெட் கிடைப்பது அரிதாகவே உள்ளது. குறிப்பாக வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணம் செய்ய ரிசர்வேஷனில் டிக்கெட் கிடைப்பதில்லை. தட்கல் முறையிலான டிக்கெட் முதல் நாள் சில மணிநேரம் மட்டுமே கிடைக்கும்.