பயங்கரவாதிகளை ஒழிக்க நடவடிக்கை: ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 2 அதிநவீன போர் ஹெலிகாப்டர்களை வழங்கியது இந்தியா

காபுல்: ஆப்கானிஸ்தானின் ராணுவத்தை மேம்படுத்தும் விதமாக அந்நாட்டுக்கு மேலும் 2 அதிநவீன போர் ஹெலிகாப்டர்களை இந்தியா வழங்கியுள்ளது.ஆப்கானிஸ்தான் நாட்டில் பல ஆண்டுகளாக தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் இருந்து  வருகிறது. அவர்களை ஒடுக்கும் பணியில் அரசு படைகள் மற்றும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஈடுபட்டு வருகிறது. தலிபான்களின் பிடியில் இருந்து மீண்டு வரும் ஆப்கானிஸ்தானின் சாலை வசதி உள்ளிட்ட  உள்கட்டமைப்புகளை மேம்படுத்த இந்தியா அந்நாட்டில் சுமார் 2 பில்லியன் டாலர்கள் வரை முதலிடு செய்துள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தான் ராணுவத்தை மேலும் வலிமைபடுத்த கடந்த 2015-16 ஆண்டுகளில் அந்நாட்டு விமானப்படைக்கு 4 போர் ஹெலிகாப்டர்களை வழங்கியது. அவற்றுக்கு மாற்றாக 4 அதிநவீன எம்ஐ-24 ரக அதிநவீன போர்  ஹெலிகாப்டர்களை பரிசாக வழங்க இந்தியா உறுதியளித்தது. அதன் ஒருபகுதியாக கடந்த மே மாதம் 2 ஹெலிகாப்டகளை இந்தியா ஆப்கானிஸ்தானிடம் வழங்கியது. இந்தியா அளித்த உறுதியின் படி ஆப்கானிஸ்தானுக்கு வழங்க வேண்டிய  மீதமுள்ள 2 அதிநவீன ஹெலிகாப்டர்களை காபுலில் அந்நாட்டுக்கான இந்திய தூதர் வினைய்குமார் ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் வழங்கினார்.

ஹெலிகாப்டர்களை பெற்றுக் கொண்ட ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அஸதுல்லா ஹலித் கூறுகையில், ஆப்கானிஸ்தான் படைகளுக்கு அதிநவீன போர் ஹெலிகாப்டர்கள் வழங்கிய இந்தியாவுக்கு நன்றி. இந்த  ஹெலிகாப்டர்களை பயங்கரவாதிகளை ஒழிக்கவும், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை ஏற்படுத்த உதவவும், அமைதியை நிலைநாட்டவும் பயன்படுத்துவோம்’ என தெரிவித்தார்.

Related Stories: