வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணியை 3 நாளில் முடிக்க கெடு: மாநகராட்சி ஆணையர் உத்தரவு
சென்னை: வடகிழக்கு பருவமழையையொட்டி, மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணியை 3 நாளில் முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கையாக சென்னையில் உள்ள மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. இதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் அனைத்து வடிகால்களையும் பொறியாளர்கள் ஆய்வு செய்து எந்தெந்த வடிகால்களை தூர்வார வேண்டும் என்பது தொடர்பாக அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில், கால்வாய்கள் தூர்வாரும் பணிக்கான நிர்வாக அனுமதியை வட்டார துணை ஆணையர்களே வழங்குவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் மழைநீர் வடிகாலில் நீர் சேரும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் முறையாக ஆய்வு செய்து தூர்வார வேண்டும் என்றும், இந்த பணிகளை ஜி.ஐ.எஸ் முறையில் புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. தூர்வாரும் கழிவுகளை குப்பை கிடங்கில் அதற்கென தனியாக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில்தான் கொட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.