புதுடெல்லி: சொத்து, நில ஆவணங்களை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பாக அடுத்த மாதம் 20ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி ஆதார் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கி கணக்கு, எரிவாயு இணைப்பு, பான் கார்டு என ஒவ்வொன்றையும் ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி நடந்து வருகிறது. இதனிடையே, பாஜ வக்கீல் அஷ்வினி குமார் உபாத்யாய், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில், `கருப்பு பணம், ஊழல், பினாமி பரிவர்த்தனை ஆகியவற்றை தடுக்க சொத்து, நில ஆவணங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அதிகமாக சொத்து வாங்கி குவிக்க முடியாது’ என கூறப்பட்டிருந்தது.