திருப்பூர்: திருப்பூரில், மத்திய அரசின் திட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் திருப்பூர் எம்.பி.க்கள் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர். திருப்பூர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் திருப்பூர் எம்.பி.சுப்பராயன் தலைமையில் நடந்தது. இதில், ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய வளர்ச்சி பணிகள், திட்டங்கள் நிறைவேற்றத்தை கண்காணிப்பதற்காக மத்திய அரசின் மூலம் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் எம்.பி.க்கள் தலைவர்களாக செயல்படுவர். மாவட்டத்திற்குட்பட்ட இதர நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணை தலைவர்களாக செயல்படுவார்கள். மாவட்ட கலெக்டர் செயலராக செயல்படுவர்.
இதில் வருவாய், நில அளவை, நகர்ப்புற வளர்ச்சி, குடிநீர், ஊரக வளர்ச்சி, கல்வி, சமூக நலம், வேளாண்மை, மின்சாரம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளின்கீழ் செயல்படுத்தப்படும். 20 மத்திய திட்டங்கள் செயலாக்குவது குறித்து கண்காணிக்கப்படும். திருப்பூரில் நடந்த கூட்டத்தில் மாநகராட்சியில் நிறைவேற்றப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டம், நூறு நாள் வேலை திட்டம் மற்றும் இதர பணிகள் பற்றி எம்.பி.க்கள் சுப்பராயன், கணேசமூர்த்தி, சண்முகசுந்தரம் ஆகியோர் கருத்துகளை கூறினர். எம்.பி.க்கள் சொன்ன கருத்துகள், ஆலோசனைகளை கவனத்தில் கொண்டு வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றும்படி கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறினார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு: இக்கூட்டத்தில், மாவட்டத்தை சேர்ந்த தொகுதி எம்.எல்.ஏ.க்கள் உறுப்பினர்களாக பங்கேற்கலாம். காங்கயம் எம்.எல்.ஏ. தனியரசு மட்டும் கலந்து கொண்டார். ஆனால், குணசேகரன் (திருப்பூர் தெற்கு), விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), நடராஜன் (பல்லடம்) அதிமுக எம்.எல்.ஏ.க்கள் யாரும் பங்கேற்கவில்லை.