×

உங்கள் வீட்டு மகளை வரவேற்க இன்னொருவர் மகளை கொன்றுவிட்டீர்கள்: பேனர் வழக்கில் ஜெயகோபாலுக்கு ஐகோர்ட் கண்டனம்

சென்னை: உங்கள் வீட்டு மகளை வரவேற்க இன்னொருவர் மகளை கொன்றுவிட்டீர்கள் என பேனர் விழுந்த வழக்கில் முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் ஏன் இவ்வளவு நாட்கள் தலைமறைவாக இருந்தீர்கள் எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஜெயகோபால் ஜாமின் வழக்கு:

சென்னை பள்ளிக்கரணை அருகே நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்காக சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர்கள் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் கீழே விழுந்து, அவர் மீது பின் வந்த லாரி ஏறியதால் மரணமடைந்தார். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக நிர்வாகி ஜெய்கோபால் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் கடந்த 27ம் தேதி இருவரும் கைது செய்யப்பட்டனர். கடந்த 12 நாட்களாக சிறையில் இருக்கும் இவர்கள் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவில் தனது மகளின் திருமணத்திற்காக வாழ்த்து கூறி கட்சியினர் பேனர் வைத்ததாகவும், வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் சாலை நடுவே பேனர் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எண்ணம் எதுவும் தங்களுக்கு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த சம்பவம் ஒரு துர்திஷ்டவசமான சம்பவம் எனவும், எனவே இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

நீதிபதி கண்டனம்:

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உங்கள் வீட்டு மகளை வரவேற்க இன்னொருவரின் மகளை கொன்றுவிட்டிர்கள் என நீதிபதி கண்டனம் தெரிவித்தார். மேலும் இவ்வளவு நாட்கள் ஏன் நீங்கள் தலைமறைவாக இருந்தீர்கள் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு ஜெய்கோபால் தரப்பில், விபத்து நடந்த பிறகு சிகிச்சைக்காக மருத்துவமனையில் ஜெய்கோபால் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், சிகிச்சை பெற்று வந்ததினால் உடனடியாக காவல்துறையிடம் சரணடைய முடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதனை தொடர்ந்து, வழக்கின் விசாரணையை அக்டோபர் 17ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். மேலும் அன்றைய தினம் ஜெய்கோபால் ஜாமின் மனு மீது தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Tags : home daughter ,Icort ,Jayagopal , Banner case, jayakopal, bail, judge, condemnation, High Court
× RELATED மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி...