ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் மீண்டும் கைது? டெல்லி சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் 14 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை விசாரித்த சிபிஐ நீதிமன்றம் அதுதொடர்பான தீர்ப்பை இன்று வழங்குகிறது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கடந்த வாரம் மனுத் தாக்கல் செய்தது. இதை நேற்று  விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிமன்றம் கூறியிருந்தது.  இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.  அவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தனது வாதத்தில், “ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கையை ஏற்க முடியாது.

இதில் குறிப்பாக ஒரே வழக்கில், ஒரே சம்பவத்துக்காக இரண்டு முறை கைது என்பது தேவையில்லாத ஒன்று’’ என்று வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் துஷார்  மேத்தா தனது வாதத்தில், “ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைமாறு பெற்றுக்கொண்டு தான் வேறு ஒரு நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்து பல மடங்கு பலன் அடைந்துள்ளார். மேலும் ப.சிதம்பரம் இந்த வழக்கில்  சி.பி.ஐ காவலில் இருந்திருந்தாலும், பணப்பரிவர்த்தனை தொடர்பாகவும், அதனை முறைகேடாக பயன்படுத்தியது உள்ளிட்டது தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அதனால் இதில் அமலக்கத்துறை காவல் விசாரணை என்பது  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. 14 நாட்கள் அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’’ என்று கூறினார். இதையடுத்து இன்று இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

விளக்கம் கேட்டு சிபிஐ மனு

 ப.சிதம்பரம் ஜாமீன் வழக்கில் டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவில் சில விளக்கங்கள் கோரி சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை  டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவரது தரப்பில் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவில்,  ப.சிதம்பரம் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிடுவார் மற்றும் ஆதாரங்களை அழித்து விடுவார் என்ற சி.பி.ஐ.யின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளதற்கான காரணம் புரியவில்லை. அதனால் குறிப்பிட்ட அந்த சாராம்சங்கள் குறித்து உச்ச  நீதிமன்றம் விளக்க வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து இன்றைய விசாரணையின்போது சிபிஐயின் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: