கடவூர்: கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா கன்னிமார்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (43). விவசாய கூலி தொழிலாளி. இவர், பட்டா பெயர் மாற்றம் மற்றும் வாரிசு சான்றிதழுக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர் காளியப்பனை அணுகினார். அவர் ரூ.15ஆயிரம் லஞ்சம் கேட்டபோது, பொன்னுச்சாமி ரூ.9 ஆயிரம் தர சம்மதித்துள்ளார். பின்னர் இதுபற்றி அவர், கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைபடி, ரசாயனம் தடவிய பணத்தை கிராம நிர்வாக அலுவலரிடம் பொன்னுச்சாமி நேற்று கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், விஏஓ காளியப்பனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.