தி.நகர் துணிக்கடையில் நெரிசலை பயன்படுத்தி வாடிக்கையாளரிடம் 40 ஆயிரம், செல்போன் திருடிய பெண் கைது

சென்னை: தி.நகர் துணிக்கடையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி வாடிக்கையாளரிடம் 40 ஆயிரம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக தி.நகரில் உள்ள கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் தி.நகரில் உள்ள அனைத்து கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்நிலையில், தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபல துணிக்கடையில் பழனியை சேர்ந்த பூமாலை (62) என்ற பெண் துணிகள் வாங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி பூமாலையின் பையில் இருந்த செல்போன் மற்றும் 40 ஆயிரத்தை பெண் ஒருவர் திருடியுள்ளார். சுதாரித்துக்கொண்ட பூமாலை கூச்சலிட்டார். உடனே, அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணை பிடித்து, மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த சாந்தி (எ) தில் சாந்தி (49) என்பதும், இவர் மீது சென்னை மாநகரில் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. அதைதொடர்ந்து போலீசார், சாந்தியை கைது செய்தனர். அவரிடம் இருந்து கொள்ளையடித்த ₹40 ஆயிரம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.

Related Stories: