பூந்தமல்லி: குடும்ப தகராறில் கணவனை பிரிந்து சென்ற மனைவி, மீண்டும் சேர்ந்து வாழ்வது தொடர்பாக சமரசம் பேச வந்தபோது, கணவனால் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பூந்தமல்லி அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், அம்மன் நகரை சேர்ந்தவர் கிட்டப்பன் (35), எலக்ட்ரீஷியன். இவரது மனைவி சுமதி (28). இவர்களுக்கு வீரமணி, பரணி என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், கிட்டப்பன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சுமதி, கணவனை பிரிந்து, கடந்த சில மாதங்களுக்கு முன், அதே பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கு, தனது 2 குழந்தைகளுடன் சென்றுவிட்டார். நேற்று காலை 9.30 மணியளவில் தனது 2 மகன்களையும் வழக்கம்போல் பள்ளியில் விட்டுவிட்டு, வீடு திரும்பிய சுமதி, கணவனுடன் சேர்ந்து வாழ்வது குறித்து நீண்ட நேரம் யோசனை செய்தார். பின்னர், தகராறு தொடர்பாக கணவனுடன் சமரசம் பேசுவதற்காக, அவரது வீட்டுக்கு சென்றார்.