சேர்ந்து வாழ்வது தொடர்பாக சமரசம் பேச வந்த மனைவியை சரமாரி குத்தி கொன்ற கணவன் : பூந்தமல்லி அருகே பரபரப்பு

பூந்தமல்லி: குடும்ப தகராறில் கணவனை பிரிந்து சென்ற மனைவி, மீண்டும் சேர்ந்து வாழ்வது தொடர்பாக சமரசம் பேச வந்தபோது, கணவனால் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பூந்தமல்லி அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், அம்மன் நகரை சேர்ந்தவர் கிட்டப்பன் (35), எலக்ட்ரீஷியன். இவரது மனைவி சுமதி (28). இவர்களுக்கு வீரமணி, பரணி என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், கிட்டப்பன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சுமதி, கணவனை பிரிந்து, கடந்த சில மாதங்களுக்கு முன், அதே பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கு, தனது 2 குழந்தைகளுடன் சென்றுவிட்டார். நேற்று காலை 9.30 மணியளவில் தனது 2 மகன்களையும் வழக்கம்போல் பள்ளியில் விட்டுவிட்டு, வீடு திரும்பிய சுமதி, கணவனுடன் சேர்ந்து வாழ்வது குறித்து நீண்ட நேரம் யோசனை செய்தார். பின்னர், தகராறு தொடர்பாக கணவனுடன் சமரசம் பேசுவதற்காக, அவரது வீட்டுக்கு சென்றார்.

அங்கு, பேச்சுவார்த்தையின் போது இருவருக்கும் மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த கிட்டப்பன், சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து சுமதியை சரமாரியாக குத்தினார். பின்னர், ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த சுமதியின் தலையில் கிட்டப்பன் சுத்தியால் ஓங்கி அடித்துள்ளார். இதில் சுமதி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கிட்டப்பன் பூந்தமல்லி காவல் நிலையம் சென்று சரணடைந்தார். அங்கு, நடந்த விவரங்களை போலீசாரிடம் கூறி அழுதுள்ளார். பின்னர், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சுமதியின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரணடைந்த கிட்டப்பனை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: