பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோளில் 5.8-ஆக பதிவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் இருந்து 157 கி.மீ தொலைவில் உள்ள இந்துகுஷ் பகுதியை மையமாகக்கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.8-ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் வடகிழக்கு மாகாணமான கைபர் பக்துவா பகுதியை தாக்கியது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அந்நாட்டின் பெஷாவர், மலகண்ட், மர்தான், சர்சத்தா, அட்டாக் மற்றும் ஹசாரா ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டது. வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. பல இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்தன.

இதனால், அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப்படவில்லை. எனினும், நிலநடுக்கத்தால் இதுவரை ஏற்பட்ட பாதிப்போ அல்லது உயிரிழப்பு குறித்தோ எந்த தகவலும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானில் கடந்த மாதம் ஏற்பட்ட இதே அளவிலான நிலநடுக்கத்தில் 37 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: