டெல்லி : கடன் வழங்கும் முகாம்கள் மூலம் கடந்த 9 நாட்களில் 81,781 கோடி ரூபாய் கடன் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலையை சமாளிப்பது குறித்து பொதுத் துறை வங்கிகளின் நிர்வாகிகளுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் 19ம் தேதி ஆலோசனை நடத்தினார்.அப்போது திருவிழாக் காலங்களில் பொதுமக்களின் கைகளில் பணம் இருப்பதை உறுதி செய்யும் வகையில் 400 மாவட்டங்களில் மாபெரும் கடன் முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டது..
முகாம்கள் மூலம் கடன் வழங்க பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி உள்பட அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் முடிவு செய்தன.இதில் சில்லறை வர்த்தகம், விவசாயம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள், வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான கடன் கல்விக்கடன், தனிநபர் கடன் ஆகியவை உடனடியாக வழங்கப்படுகின்றன.
பண்டிகை செலவுகள், வீடு வாங்குதல், வேளாண்மை, சிறு-குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் இந்த முகாம்கள் 2 தவணையாக நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், பொதுத்துறை வங்கிகள் மூலம் இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் 9ம் தேதி வரை 81 ஆயிரத்து 781 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை செயலாளர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார். அதில் 34 ஆயிரத்து 342 கோடி ரூபாய் புதிய நபர்களுக்கு அளிக்கப்பட்ட கடன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.