இன்ஜினியரை தாக்கிய நடன கிளப் ஊழியர் கைது

சென்னை:  சென்னை அசோக் நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (34). இன்ஜினியரான இவர், துரைப்பாக்கத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். வழக்கமாக அண்ணாசாலை உட்ஸ் சாலையில் உள்ள இரவு நடன கிளப்புக்கு இவர்  அடிக்கடி செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு பார்த்திபன் நடன கிளப்புக்கு சென்றார். அப்போது கிளப் ஊழியர்களுக்கும், பார்த்திபனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கிளப் ஊழியர்கள், பார்த்திபனை சரமாரியாக அடித்து உதைத்து வெளியேற்றி உள்ளனர். பின்னர் சம்பவம் குறித்து  அண்ணாசாலை காவல் நிலையத்தில் பார்த்திபன், நடன கிளப்பில் ஊழியர்கள் என்னிடம் இருந்து 1.48 லட்சம் பணத்தை பறித்து கொண்டு அடித்து வெளியேற்றியதாக புகார் அளித்தார்.

அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிளப்பில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று பார்த்த போது, கிளப் ஊழியர் ஜெயராஜ் என்பர் இன்ஜினியர் பார்த்திபனை தாக்கியது தெரியவந்தது. ஆனால் பணம் பறித்தது  போன்று எந்த காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகவில்லை. இதையடுத்து நடன கிளப் ஊழியர் ஜெயராஜ் (42) என்பவரை கைது செய்தனர். மேலும் 1.48 லட்சம் பணம் பறித்ததாக பொய் புகார் அளித்த பார்த்திபனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: