மணலி: மணலி நெடுஞ்சாலையில் உடைந்த பைப்லைனை அதிகாரிகள் விரைந்து சீரமைக்காததால், ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சாலையில் வழிந்தோடுகிறது. திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட கத்திவாக்கத்தில் வசிக்கும் மக்களுக்கு மணலி குடிநீரேற்று நிலையத்தில் இருந்து மணலி நெடுஞ்சாலை வழியாக பைப்லைன் மூலம் எர்ணாவூர் குடிநீர் நிலையத்திற்கு குடிநீர் கொண்டுவரப்பட்டு, பின்னர் அங்கிருந்து விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் மணலி எம்எப்எல் நிறுவனம் அருகே மணலி நெடுஞ்சாலையில் பூமிக்கடியில் புதைக்கப்பட்டுள்ள இந்த ராட்சத பைப்லைனில் நேற்று காலை திடீரென்று உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வெளியேறியது.