பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பிரதான சாலையில் காஜா முகைதீன் என்பவர் பழைய இரும்பு குடோன் வைத்துள்ளார். கடந்த 7ம் தேதி இங்கு வந்த 8 பேர் கொண்ட கும்பல், மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். ஆனால், மாமூல் தராததால் ஆத்திரமடைந்த அவர்கள், குடோனை சூறையாடினர். இதை தட்டிக்கேட்ட 2 ஊழியர்களையும் தாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடியவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய ஓட்டேரியை சேர்ந்த சிலம்பரசன் மற்றும் விக்கி, ஆகியோர் எழும்பூர் நீதிமன்றத்திலும், அனகாபுத்தூரை சேர்ந்த விமல்ராஜ் பெரும்பதூர் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். தலைமறைவாக உள்ள மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.