டெங்கு காய்ச்சல் வேகமாக பரவும் நிலையில் நிலவேம்பு கசாயத்துக்கு தட்டுப்பாடு: அரசு நடவடிக்கை எடுக்குமா?

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், பொதுமக்கள் தேவைக்கு ஏற்ப நிலவேம்பு கசாயம் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, சென்னையில் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மக்கள் மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். தற்போது,  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 160 பேரும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 38 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  அதேப்போல், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட  139 பேரும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 39 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட  110 பேரும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 14 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 80 பேரும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேப்போல், தமிழகத்தில் கோவை, சேலம், ஈரோடு நீலகிரி, நெல்லை போன்ற மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இது கடந்த ஆண்டை விட  அதிகமாகும்.

மேலும், தமிழகத்தில் கடந்த ஆண்டு 4,486 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு, அதில் 13 பேர் பலியாகினர். 2017ம் ஆண்டில் 23,294 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு, அதில் 65 பேர் இறந்தனர். 2016ம் ஆண்டு 2531 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு,  அதில் 5 பேர் இறந்தனர். 2015ம் ஆண்டில் 4,535 பேர் டெங்குவால் பாதிப்பட்டு, அதில் 12 பேர் இறந்தனர். இந்த ஆண்டு கடந்த 5 மாதங்கள் வரை ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 2500க்கும் மேற்ப்பட்ட மக்கள் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு  அவற்றை கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையில், காய்ச்சல் வந்தவுடன் தற்போது சித்த மருத்துவத்தில் உள்ள நிலவேம்பு கசாயத்தை தான் மருந்தாக பயன்படுத்தி வருகின்றனர்.  அதன்படி தமிழக அரசு சார்பில் கடந்த சில  நாட்களாக சென்னை முழுவதும் நிலவேம்பு கசாயத்தை காய்ச்சி பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். தமிழகம் முழுவதும் திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளிலும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், தற்போது தட்டுப்பாடு காரணமாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் காலநிலை மாற்றம் காரணமாக ெடங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இந்த காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயத்தை தான் மருத்துவர்கள்  பரிந்துரை செய்கின்றனர். சென்னையில், அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள ‘டாம்ப்கால்’ நிறுவனத்தில் நிலவேம்பு கசாயம்  விற்பனை செய்யப்படுகிறது. அங்கு நோயாளிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கின்றன. ஒரு நபருக்கு குறிப்பிட்ட  அளவுக்கு மேல் தர முடியாது என்று கூறுகின்றனர். காரணம் மூலப்பொருள் தட்டுப்பாடு என்று கூறுகின்றனர். அரசு சார்பில், பொது இடங்களில் ஆங்காங்கே வழங்கப்பட்டு வந்த நிலவேம்பு காசாயமும் தற்போது, வழங்கப்படுவதில்லை. எனவே நிலவேம்பு கசாயம் தேவையான அளவு கிடைக்கும் வகையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை  மற்றும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனையில் நிலவேம்பு கசாயத்துக்கான பவுடர் விற்பனை  செய்யப்படுகிறது. அங்கு நோயாளிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கின்றன. ஒரு நபருக்கு குறிப்பிட்ட அளவுக்கு மேல் தர முடியாது என்று  கூறுகின்றனர். காரணம்  மூலப்பொருள் தட்டுப்பாடு என்று கூறிகின்றனர்

Related Stories: