வாடிகன் சிட்டி: மறைந்த கேரள கன்னியாஸ்திரி மரியம் திரேசியா உள்பட 5 பேரை, புனிதராக போப் பிரான்சிஸ் நேற்று அறிவித்தார். கேரள மாநிலம், திருச்சூரில் கடந்த 1914ம் ஆண்டு ‘சிஸ்டர்ஸ் ஆப் ஹோலி பேபிலி’ என்ற அமைப்பை உருவாக்கியவர் மரியம் திரேசியா. இவர் கேரளாவில் பள்ளிகள், விடுதிகள், அனாதை இல்லங்கள் கட்டி கல்வி மற்றும் சமூக சேவையில் ஈடுபட்டார். ஏழைகளுக்கு உதவினார். நோய் வாய்ப்பட்டவர்களை கவனித்தார். அவரிடம் பல அற்புத சக்திகளும் இருந்துள்ளது. பலரது நோய்களை குணப்படுத்தி உள்ளார். இவர் கடந்த 1926ம் ஆண்டு தனது 50 வயதில் இறந்தார். இவரை ஆசிர்வதிக்கப்பட்டவராக கடந்த 2000ம் ஆண்டு அப்போதைய போப் 2ம் ஜான்பால் அறிவித்தார். சமூக சேவையில் அற்புதங்கள் நிகழ்த்தியவர்களுக்கு போப், புனிதர் பட்டம் வழங்குவது வழக்கம்.