டோக்கியோ: ஜப்பானில் ‘ஹஜிபிஸ்’ புயல் தாக்கியதில் 33 பேர் பலியாகி உள்ளனர். 12க்கும் மேற்பட்டோரை காணவில்லை.ஜப்பான் தலைநகர் டோக்கியோ, அதன் சுற்று வட்டாரங்களான குன்மா, மியாகி, புகுஷிமா ஆகியவற்றை ‘ஹஜிபிஸ்’ புயல் நேற்று முன்தினம் கடுமையாக தாக்கியது. இது, டோக்கியோவுக்கு தென்மேற்கில் உள்ள இசு தீபகற்பத்தில் கரையை கடந்தது. இதனால், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதையடுத்து, சிகுமா, தாமா உள்ளிட்ட 14 ஆறுகளில் அபாய கட்டத்தை கடந்து வெள்ளம் செல்கிறது. இந்த ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில், 14,000க்கும் மேற்பட்ட வீடுகள், வெள்ளத்தில் மூழ்கின.