வருவாயை உயர்த்துவது தொடர்பாக ஜிஎஸ்டி அதிகாரிகள் குழு நாளை ஆலோசனை

புதுடெல்லி: ஜிஎஸ்டி வருவாயை உயர்த்துவது எப்படி என்பது தொடர்பாக, புதிதாக நியமிக்கப்பட்ட ஜிஎஸ்டி அதிகாரிகள் குழுவினர் நாளை முதல் முறையாக கூடி ஆலோசனை நடத்துகின்றனர். பொருளாதார மந்த நிலை காரணமாக தொழில்துறைகள் நலிவடைந்துள்ளன. இதன் எதிரொலியாக ஜிஎஸ்டி வருவாயும் குறைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 19 மாதங்களில் மிக குறைந்த பட்ச அளவாக 91,916 கோடி  வசூல் ஆகியுள்ளது. இந்நிலையில், ஜிஎஸ்டி வருவாயை மேலும் அதிகரிப்பது எப்படி என பரிந்துரை செய்யவும், வரி நிர்வாகத்தை மேம்படுத்தவும் அதிகாரிகள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

 இந்த குழுவில் ஜிஎஸ்டி முதன்மை ஆணையர், வருவாய் இணைய செயலாளர் உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகளும், தமிழகம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த ஜிஎஸ்டி ஆணையர்களும் இடம்பெற்றுள்ளனர்.  இந்நிலையில், வரி வருவாயை உயர்த்துவது தொடர்பாக நாளை ஆலோசனை நடத்த உள்ளனர் என ஜிஎஸ்டி கவுன்சில் சிறப்பு செயலாளர் ராஜீவ் ராஜன் கூறியுள்ளார். இந்த குழு தனது அறிக்கையை 15 நாளில் சமர்ப்பிக்கும் என தெரிகிறது.

Related Stories: