சண்டிகர்: வட்டியில்லா பயிர் கடன் வழங்குவது உட்பட பல்வேறு வாக்குறுதிகளை அரியானா சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் பாஜ அளித்துள்ளது.அரியானா மாநிலத்தில் வருகிற 21ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பாஜ நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. பாஜ செயல் தலைவர் ஜேபி நட்டா இதை வெளியிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘இந்த தேர்தல் அறிக்கை சாதாரணமானது அல்ல. இது அர்ப்பணிப்பு அறிக்கை. இது மிகவும் முக்கியமான மற்றும் படிக்கப்பட்ட ஆவணம். இதனை தயாரிப்பதற்காக அதிக முயற்சிகள் எடுக்கப்பட்டது. இது கொள்கையளவில் இல்லாமல் உண்மையான நடைமுறைக்குரிய செயல்பாடுகளை கொண்டுள்ளது,” என்றார்.