புதுடெல்லி: நாட்டின் பொருளாதார நிலையை பாலிவுட் சினிமா வசூலுடன் ஒப்பிட்டு தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால், அதை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வாபஸ் பெற்றுள்ளார். நாட்டில் வேலைவாய்ப்பின்மை சதவீதம் மிக அதிகமாக உள்ளதாக என்எஸ்எஸ்ஓ என்ற அமைப்பும், இந்தியாவில் பொருளாதார மந்தநிலை இன்னும் அதிகமாக இருக்கும் என சர்வதேச நிதியமும் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தன. இதை விமர்சிக்கும் வகையில் மும்பையில் நேற்று முன்தினம் பேட்டியளித்த மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ‘கடந்த 2ம் தேதி விடுமுறை தினத்தில் 3 பாலிவுட் படங்கள் ரூ.120 கோடி வசூல் செய்துள்ளன. நாட்டின் பொருளாதாரம் வலுவான நிலையில் இல்லை என்றால், எப்படி இந்த 3 படங்களும் ஒரே நாளில் ரூ.120 கோடி வசூல் செய்திருக்கும்?’ என கூறினார்.. இதற்கு பல தரப்பில் கண்டனங்கள் எழுந்தது.