மைசூரு: கர்நாடகாவில் போலீஸ் டிஎஸ்பி ஒருவர் கை, கால் நரம்புகளை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கபட்டிணா காவல்நிலையத்தில் டிஎஸ்பியாக பணியாற்றி வருபவர் யோகானந்த். இவர் பாபுராயனகொப்பலில் உள்ள போலீஸ் குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்தநிலையில், நேற்று காலை போலீஸ் குடியிருப்பில் உள்ள தனது வீட்டின் கழிவறையில் கை மற்றும் கால்களின் நரம்புகளை அறுத்து கொண்டு மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப் பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஸ்ரீரங்கப்பட்டிணா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக மைசூரு நாராயண ஹிருதாலயா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் அபாயக்கட்டத்தை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஸ்ரீரங்கபட்டிணா காவல் நிலையத்தில் டிஎஸ்பியாக பணியாற்றி வரும் யோகானந்த், சமீபத்தில் குடும்ப பிரச்னையால் மனமுடைந்து காணப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.