சென்னை: நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. ஈரோடு மாவட்டம் ஈரோடு, பெருந்துறை, பவானி, சென்னிமலை, கொடுமுடி, காஞ்சிகோயில், திங்களூர், விஜயமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்றிரவு பலத்த காற்றுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான காவேரி நகர், எம்ஜிஆர் நகர், கோட்டைமேடு, படை வீடு உள்ளிட்ட பகுதிகளில் திடீரென சுமார் 2 மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. விவசாயிகள் தற்போது நாற்று நடவு செய்ய நிலங்களை சேறு அடித்து இருந்த நிலையில் இந்த மழை பெய்திருப்பது மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.