ஈரான் அச்சுறுத்தலை முறியடிக்க சவுதிக்கு மேலும் 3,000 அமெரிக்க வீரர்கள்

வாஷிங்டன்: ஈரான் அச்சுறுத்தலை முறியடிப்பதற்காக, சவுதி அரேபியாவுக்கு கூடுதலாக 3 ஆயிரம் வீரர்களை அனுப்புவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட அமெரிக்கா, அந்நாடு மீது பொருளாதார தடைகள் விதித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான் தூண்டுதல் மூலம் சவுதி அரேபியாவின் அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு காரணம் ஈரான் என சவுதி அரேபியாவும், அமெரிக்காவும் குற்றம்சாட்டின. இந்நிலையில், சவுதி அரேபியாவின் பாதுகாப்புக்கு கூடுதல் படைகளை அனுப்பும்படி அமெரிக்காவிடம் சவுதி அரேபியா வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து 3 ஆயிரம் வீரர்களை சவுதிக்கு, அனுப்புவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ டிவிட்டரில் விடுத்துள்ள தகவலில், ‘ஈரான் அச்சுறுத்தலை முறியடிக்கவும், சவுதி பாதுகாப்பை பலப்படுத்தவும், சவுதி அரேபியாவுக்கு கூடுதல் படைகளை அமெரிக்கா அனுப்புகிறது. ஈரான் தனது நடவடிக்கையை மாற்றிக் கொள்ள வேண்டும் அல்லது தனது பொருளாதாரம் சீரழிவதை பார்க்க வேண்டிய நிலை ஏற்படும்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: