தீக்காயமடைந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை கணவன் எரித்துக்கொல்ல முயன்றதாக வாக்குமூலம்: போலீசார் விசாரணை

சென்னை: தேனாம்பேட்டை ஆலயம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜீவமணி (36), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி லட்சுமி (26). நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில், லட்சுமி 70 சதவீத தீக்காயங்களுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.  மருத்துவமனை நிர்வாகம் சார்பில், இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், நேற்று காலை மருத்துவமனைக்கு வந்த போலீசார், தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த லட்சுமியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், ‘‘குடும்ப தகராறில் எனது கணவன் ஜீவமணி, என் மீது மண்ணெண்ணெயை ஊற்றி உயிருடன் எரித்துக்கொல்ல முயன்றார். எனது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, என்னை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்,’’ என வாக்குமூலம் அளித்துள்ளார்.  அதன் அடிப்படையில் போலீசார், ஜீவமணி மீது வழக்கு பதிவு செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: