பண்ணாரி சோதனைச்சாவடி அருகே கரும்புகளை சுவைக்க முகாமிட்ட காட்டு யானைகள்

*வாகன ஓட்டிகள் அச்சம்

சத்தியமங்கலம்: பண்ணாரி சோதனைச்சாவடி அருகே நேற்று மதியம் காட்டு யானைகள் முகாமிட்டதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதில், பண்ணாரி சோதனைச்சாவடி அருகே அதிக உயரத்திற்கு பாரம் ஏற்றி செல்லும் வாகனங்களை கண்டறிய தடுப்புக்கம்பி அமைக்கப்பட்டுள்ளது.

தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகள், இந்த தடுப்புக்கம்பி பகுதியில் நுழையும்போது லாரியில் உள்ள கரும்புத்துண்டுகள்  சிதறி கிழே விழுந்து அப்பகுதியில் குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. கரும்பின் சுவை அறிந்த காட்டு யானைகள், இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறி சோதனைச்சாவடிக்கு வந்து கரும்புகளை சுவைக்கிறது. இந்நிலையில், நேற்று மதியம் வனத்தை விட்டு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்த 2 யானைகள் சோதனைச்சாவடி அருகே வந்து கரும்புகளை தின்றன.

இதைக்கண்ட வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து வனப்பகுதிக்கு விரட்ட முயன்றனர். இருப்பினும், யானைகள் கரும்பை தின்பதில் ஆர்வம் காட்டியதோடு நகராமல் நின்றன. நீண்ட போராட்டத்திற்கு பின் யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்டது. பட்டப்பகலில் யானைகள் சோதனைச்சாவடியில் முகாமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: