நாகர்கோவில்: நாகர்கோவில் கே.பி. ரோட்டில் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு சாலைகள் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்றன. இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் அருகே வேட்டாளி அம்மன் கோவிலில் இருந்து டெரிக் ஜங்ஷன் வரை சாலை 2 ஆக பிரிக்கப்பட்டு நடுவே காங்கிரீட் கட்டைகள் அமைக்கப்பட்டன. இதில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பஸ்ஸ்டாப் பகுதியில் பஸ்கள் நிறுத்தும் போது பின்னால் வருகின்றன. வாகனங்கள் வரிசையாக நீண்ட தூரத்திற்கு நிற்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் இந்த பகுதியில் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதுதொடர்பாக நாகர்கோவில் மாநகராட்சி, காவல்துறை, போக்குவரத்து துறை அதிகாரிகள் அண்மையில் ஆய்வு நடத்தினர். மகரநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.அந்த வகையில் நாகர்கோவில் டதி பள்ளி சந்திப்பு பகுதியில் பஸ் நிறுத்தம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள பஸ் ஸ்டாப்பை நாகர்கோவில் மாவட்ட ஜெயில் பகுதியை ஒட்டி மாற்றி அமைக்க கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயிலை ஒட்டியுள்ள பகுதியில் கலெக்டர் அலுவலக காம்பவுண்ட சுவரை இடித்து அந்த பகுதியில் பஸ் நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக இன்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், பொறியாளர் சுப்பிரமணியன், மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கலெக்டர் அலுவலக காம்பவுண்ட சுவரை இடித்து பஸ் ஸ்டாப் அமைத்து கொள்ள கலெக்டர் அணுமதி வழங்கி உள்ளார். இதனை தொடர்ந்து பஸ் ஸ்டாப் அமைய உள்ள இடத்தை பொறியாளர் சுப்பிரமணியன், போக்குவர்தது காவல் ஆய்வாளர் தங்கராஜ் மற்றும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். எனவே விரைவில் இந்த பஸ் ஸ்டாப்பை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. இதனால் கே.பி ரோட்டில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.