60 வருடங்களுக்கு பிறகு ஒரு சீன தலைவர் மீண்டும் மாமல்லபுரம் வருவது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு: ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் பேட்டி

சென்னை: 60 வருடங்களுக்கு பிறகு ஒரு சீன தலைவர் மீண்டும் மாமல்லபுரம் வருவது வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வு என மக்கள் நிதீமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மையம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனை, உலக பேட்மின்டன் சாம்பியன் பி.வி.சிந்து, திடீரென சந்தித்தார். பின், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். சந்திப்பு குறித்து சிந்து கூறுகையில், கமல்ஹாசன் நல்ல நடிகர் மற்றும் நல்ல அரசியல் தலைவர் என்பதால் அவரை சந்தித்தேன். நான் அவரது படங்களை பார்த்துள்ளேன். அவரை சந்திதத்தில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன், அவருடன் மதிய உணவும் அருந்தினேன். ஒலிம்பிக்கிற்கான தகுதிச்சுற்றுகள் நடைபெற்று வருகின்றன.

அதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன். அதில் என்னுடைய சிறந்ததை வெளிப்படுத்தி, தங்கம் வெல்ல வேண்டும் என்பதே என்னுடைய இலக்காக உள்ளது என்று கூறினார். இதையடுத்து பேசிய கமல்ஹாசன், பேனர் வைக்கக் கூடாது என நான் சொல்ல மாட்டேன். சினிமாவை தொழிலாக கொண்ட நான் அவ்வாறு கூறுவது சரியாக இருக்காது. சட்டப்பூர்வமாக அனுமதி பெற்ற இடங்களில் பேனர்களை வைக்கலாம். அதற்கு எல்லா நகரங்களிலும் அனுமதி உள்ளது. மேலும், 60 ஆண்டுகளுக்கு பிறகு சீன அதிபர் ஒருவர் மாமல்லபுரம் வருவது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. தமிழகம் வருவோரை வரவேற்க வேண்டும்; பிடிக்கவில்லை என்பதற்காக கோ பேக் எனக்கூறி திருப்பி அனுப்பக்கூடாது. சீன அதிபரின் வருகையை வெற்றி விழாவாக மாற்றுவது நம் கடமை. இந்திய - சீன நாட்டு தலைவர்கள் மக்கள் நலனுக்காக எடுக்கும் எந்தவொரு முடிவானாலும் அது வெற்றி பெற வாழ்த்துகிறேன் என கூறினார்.

அப்போது, சீன அதிபர் வருகையை ஒட்டி திபெத்திய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அது சீனாவுக்கும் திபெத்துக்கும் இடையில் தொடர்ந்து நடைபெற்று வரும் பிரச்சனை. இதில் தெற்கு கோடியில் அமர்ந்திருக்கும் நான் தலையிடக்கூடாது என்று பதிலளித்தார். இந்நிலையில், மோடி தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் #GoBackModi என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஓட்டுப்போட்டு அவரை வரவைத்ததும் நாம்தான். எனவே, அவரை கோ பேக் என்று சொல்லி நாமே திருப்பி அனுப்பக்கூடாது. பிடிக்காத விஷயங்கள் குறித்து நாம் தைரியமாக விமர்சனங்களை முன்வைப்போம். ஆனால் அவை நேர்மையாக இருக்க வேண்டும். விமர்சனங்கள் நேர்மையாக இருந்தால் நேர்மையான தலைவர் எவ்வாறு ஏற்றுக்கொள்வாரோ அவ்வாறே அவரும் ஏற்றுக்கொள்வார் என்று கமல் தெரிவித்துள்ளார்.

Related Stories: