இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு என்பது இன்று அறிவிக்கப்படும்: கிரேட்டாவுக்கு அளிக்க வாய்ப்பு

ஸ்வீடன்: நோபல் பரிசு வழங்கும் நிறுவனம் இந்தாண்டிற்கான பரிசுகளை கடந்த சில தினங்களாக அறிவித்து வருகிறது. அதன்படி இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ளது.இந்நிலையில் இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடி வரும் 16வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க்கிற்கு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. எனினும் சிலர் கிரேட்டா தன்பெர்க்கிற்கு இந்தப் பரிசு கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நோபல் பரிசு வலைத்தள தகவல்களின்படி இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு 223 நபர்களும் 78 அமைப்புகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனினும் இவர்கள் யார் என்ற விவரத்தை எப்போதும் நோபல் பரிசுக் குழு அறிவிக்காது. ஆனாலும் சில ஆங்கில பத்திரிகைகள் சிலரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்களை வெளியிட்டு வருகின்றன. அதன்படி இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு கிரேட்டா தன்பெர்க், எத்தியோப்பியாவின் பிரதமர் அபி அஹமத், நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆடம், அமேசான் காடுகளை காப்பாற்ற போராடிய ராயோனி மெட்டுக்டியர்  ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ரிப்போர்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ எனும் பத்திரிகை சுதந்திரத்திற்காக போராடும் அமைப்பு, ஐநாவின் மனித உரிமைகள் ஆணையம் ஆகிய அமைப்புகளும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தாண்டு வழங்கப்படுவது 100வது அமைதிக்கான நோபல் பரிசு என்பதால் இதனை யார் பெறுவார்கள் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.

Related Stories: