சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.29,320க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ரூ.3,665-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,822க்கும், ஒரு சவரன் ரூ.30,576க்கும் விற்பனையாகி வருகிறது. அதேபோல், சென்னையில் சில்லறை விற்பனையில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.49.90 காசுகளாகவும், ஒரு கிலோ ரூ.49,900 ஆகவும் உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனை ஆனது.
பின் ஜூன் மாதம் 26,000 ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27,000, 28,000, 29,000 என அடுத்தடுத்த மைல்கல்களை எட்டியது. செப்டம்பரில் 30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. இதனிடையே அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் முடிவுக்கு வரும் சாதகமான சூழல் உள்ளதால் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இந்த நிலையில் இந்த மாதம் சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி போன்ற விழாக்கள் வரும் பண்டிகை காலம் என்பதால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதையடுத்து விலையும் அதிகரித்துள்ளது. ஆனால், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக தங்க விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி 40 டன் தங்கம் விற்பனையாகும் நிலையில், இந்த ஆண்டு 50 சதவீத விற்பனை குறையும் என இந்திய தங்க நகை வர்த்தகர்கள் சங்கம் கூறியுள்ளது.