அமெரிக்காவுடன் எப்படியாவது வர்த்தக ஒப்பந்தத்தை எட்டிவிட வேண்டும் என சீனா துடிக்கிறது: அதிபர் டிரம்ப்

அமெரிக்கா: கஷ்ட காலத்தில் இருக்கும் சீனா அமெரிக்காவுடன் எப்படியாவது வர்த்தக ஒப்பந்தத்தை எட்டிவிட வேண்டும் என துடிப்பதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். வர்த்தகப் போரை தீவிரப்படுத்தியுள்ள அமெரிக்காவும், சீனாவும் வர்த்தக உடன்பாட்டை எட்டுவது தொடர்பான அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை இன்று தொடங்குகின்றன. அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசர் சீன துணை பிரதமர் லியூ ஹி தலைமையிலான குழுக்கள் பேச்சுவார்த்தையை நடத்துகின்றன. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது மிகவும் கடினமான சூழ்நிலையை சீனா எதிர்கொண்டுவருவதாக குறிப்பிட்டார். எப்படியாவது வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என சீனா நினைப்பதாகவும், உற்சாகம் அளிக்கும் பல்வேறு விஷயங்கள் நடைபெற்று வருவதால் தாம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் டிரம்ப் கூறினார்.

முடிவு ஏதும் எட்டப்படாமலே அமெரிக்காவும் சீனாவும் கடந்த ஓராண்டாக பேசிவருவதாகவும் மிகமுக்கியமான அம்சங்கள் குறித்து ஒப்பந்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். அமெரிக்கா மிக வலிமையான பொருளாதாரத்தையும் மிகச்சிறந்த சந்தையையும் பெற்றுள்ளது என்றும், சீனாவில் 3.5 மில்லியன் வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளதுடன் கால் உடைந்ததுபோல அந்நாட்டின் உற்பத்தி-விநியோகச் சங்கிலி முறிந்திருப்பதாகவும் அமெரிக்க அதிபர் குறிப்பிட்டார். சீனாவுடன்  ஒப்பந்தத்தை எட்ட அமெரிக்கா விரும்பினாலும் சரியான ஒப்பந்தத்தையே எட்ட விரும்புவதாகவும் ஒப்பந்தம் எட்டப்படுவதற்கு நல்ல வாய்ப்பு இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

Related Stories: