ஒரத்தநாடு: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூரை சேர்ந்தவர் தங்கராசு. இவரது மனைவி லதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தங்கராசுவும், லதாவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டனர். தங்கராசுவின் மூத்த மகன் கூலி வேலை செய்து தம்பி குருநாத்தை (18) ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பிஏ படிக்க வைத்தார். இந்நிலையில் குருநாத்தும், கண்ணந்தங்குடி கீழையூரை சேர்ந்த துரைக்கண்ணு மகன் சாமுவேல் (18) என்பவரும் இணைபிரியாத நண்பர்கள். தாய், தந்தை இல்லாததாலும், படிக்க போதிய பணமின்றி குருநாத் மன உளைச்சலுக்கு ஆளானார். இதுகுறித்து தனது நண்பன் சாமுவேலிடம் அடிக்கடி துயரத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற குருநாத், வகுப்பறையில் பூச்சிமருந்தை எடுத்து குடித்தார். இச்சம்பவத்தை நேரில் பார்த்த சாமுவேல், தனது நண்பனின் தற்கொலை முயற்சியை தாங்கி கொள்ள முடியாததால் குருநாத்தின் கையில் வைத்திருந்த மீதமிருந்த பூச்சி மருந்தை பிடுங்கி குடித்தார். இதில் இருவரும் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்தனர். இருவருக்கும் ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.