×

மோடி-ஜின்பிங் வருகையையொட்டி சென்னையில் 11, 12ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: மோடி-ஜின்பிங் வருகையை முன்னிட்டு நாளை மற்றும் நாளை மறுநாள் பாதுகாப்பு கருதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கை: இந்திய பிரதமர் மற்றும் சீனா அதிபர் சென்னை வருகையை முன்னிட்டு 11 மற்றும் 12ம் தேதிகளில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக 11 மற்றும் 12ம் தேதிகளில் சாலை வழி பயணத்தின்போது, ஜிஎஸ்டி சாலை (சென்னை விமான நிலையம் முதல் கத்திப்பாரா வரை) அண்ணாசாலை (கத்திப்பாரா முதல் சின்னமலை வரை) சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து போக்குவரத்து தாமதமாக செல்ல வாய்ப்புள்ளது. எனவே, மேற்கண்ட சாலைகளில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்கள், தகவல்  தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் முன்னேற்பாடு செய்து தங்கள் பயணத்திட்டங்களையும், வழித்தடங்களையும் அமைத்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், கனரக வாகங்கள், சரக்கு வாகனங்கள், இலகுரக சரக்கு வாகனங்கள், டேங்கர் லாரிகள் போன்ற வாகனங்கள் 11ம் தேதி காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மற்றும் 12ம் தேதி அன்று காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மேற்படி சாலைகளில் அனுமதிக்கப்படமாட்டாது.
சாலை வழி பயணத்தின்போது கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

* 11 ம் தேதி அன்று 12.30 மணி முதல் 2 மணி வரை பெருங்களத்தூரில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் ஜிஎஸ்டி சாலை நோக்கி அனுமதிக்கப்படாமல் ஜீரோ பாயின்ட் சந்திப்பிலிருந்து மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக திருப்பிவிடப்படும். மேலும், ெசன்னை தென் பகுதியிலிருந்து வடக்கு பகுதிகளுக்கு வரும் அனைத்து வாகனங்களும் பல்லாவரம் ரேடியால் சாலை வழியாக, குரோம்பேட்டை- தாம்பரம் வழியாக மதுரவாயல் புறவழிச்சாலையை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை பகுதிகளிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் பல்லாவரம் ரேடியல் சாலையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
* 11ம் தேதி மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை ஜிஎஸ்டி சாலையில் வரும் அனைத்து வாகங்களும் கத்திப்பாரா சந்திப்பிலிருந்து கிண்டி நோக்கி அனுமதிக்கப்படாமல் 100 அடி சாலை வழியாக செல்ல திருப்பிவிடப்படும்.
* 11ம் தேதி அன்று பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை ராஜீவ் காந்தி சாலையில் (ஓஎம்ஆர்) நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோழிங்கநல்லூர் சந்திப்பில் பெரும்பாக்கம் வழியாக செல்ல திருப்பிவிடப்படும். மேலும், கிழக்கு கடற்கரை சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.
* 12ம் தேதி அன்று காலை 7.30 மணி முதல் பகல் 2 மணி வேரை ராஜீவ் காந்தி சாலை நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோழிங்கநல்லூர் சந்திப்பில் பெரும்பாக்கம் வழியாக செல்ல திருப்பிவிடப்படும். மேலும், 12ம் தேதி காலை 7 மணி முதல் 1.30 மணி வரை கிழக்கு கடற்கரை சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Traffic change ,Chennai ,Visit Modi-Jinping , Traffic change, Chennai , 11th and 12th ,Modi-Jinping visit
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...