மேட்டூர் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 24,69 கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழக-கர்நாடக எல்லையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதை பொறுத்து, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், நேற்று முன்தினம் 10,396 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 24,169 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 700 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
திறப்பை காட்டிலும் வரத்து அதிகரித்துள்ளதால், நேற்று முன்தினம் 116.90 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 116.97 அடியாக அதிகரித்தது. நீர்இருப்பு 88.71 டிஎம்சியாக உள்ளது. அதேபோல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் விநாடிக்கு 8600 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.