×

நாங்குநேரி பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ திடீர் மயக்கம்: நெல்லை மருத்துவமனையில் சிகிச்சை

நெல்லை: களக்காடு பகுதியில் பிரசாரம் செய்து திரும்பிய செய்திதுறை அமைச்சர்  பாளை அருகே வரும்போது திடீரென மயக்கமடைந்தார். இதையடுத்து நெல்லை தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் நாராயணனுக்கு ஆதரவாக 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் நெல்லையில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை  அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று முன்தினம் களக்காடு பகுதியில் பிரசாரம் முடித்து விட்டு இரவு உணவு அருந்திய பின்னர் நெல்லையில் அவர் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். பாளையங்கோட்டை அருகே  கொங்கந்தான்பாறை அருகே வரும்போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து அவரை உடனடியாக பாளை ஐகிரவுண்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு இரவிலும் நேற்று பகலிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம்  மற்றும் உணவு ஒவ்வாமை காரணமாக உடல்நலக்குறைவும் மயக்கமும் ஏற்பட்டது தெரியவந்தது. அமைச்சர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தகவல் நேற்று பிற்பகல் பிற அமைச்சர்கள் மற்றும் அதிமுகவினர் மருத்துவமனைக்கு பார்க்க  சென்றபோதுதான் வெளியே தெரியவந்தது. இதை கேள்விப்பட்டு அதிமுகவினர் உள்ளிட்ட மேலும் பலர் அங்கு சென்றனர். நேற்று மாலையில் அவரது உடல் நிலை சீரானது. இதனால் அவர் டிஸ்சார்ஜ் ஆகி சென்னை செல்கிறார் என  அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Kadambur Raju ,Kadamboor Nanguneri ,fainting ,Nankuneri Campaign Raju ,NEX , Nanguneri Promotion, Minister Kadambur Raju, Paddy Hospital
× RELATED இந்த நிமிடம் வரை கூட்டணியில் சேர்க்க...