சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் காங்கிரஸ், திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அக்கட்சியின் செயல் தலைவர் விஷ்ணுபிரசாத் கூறினார். இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவரும், எம்பியுமான டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் சந்திக்க இருப்பதை உலக நாடுகள் மிகவும் முக்கிய நிகழ்வாக பார்க்கின்றன. காஞ்சிபுரம் பல்லவ வம்சத்தில் பிறந்தவர் போதி தர்மர். உழைப்பு, சுறுசுறுப்பு போன்ற தத்துவங்களை சீனாவுக்கு போதித்தது போதி தர்மர்தான். நமது பெருமையை நாம் உணரவேண்டும். சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத்தில் சிலை அமைத்தது போல போதி தர்மருக்கு காஞ்சிபுரத்தில் பிரமாண்ட சிலை அமைக்க வேண்டும்.