புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக அகவிலைப்படியை கூடுதலாக 5 சதவீதம் உயர்த்தி வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக, கூடுதலாக 5 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது குறித்து, மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக 5 சதவீத கூடுதல் அகவிலைப்படி உயர்வை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், ஜூலை மாத தவணையான 12 சதவீதத்துடன் சேர்த்து 17 சதவீத அகவிலைப்படியை ஊழியர்கள் பெறுவார்கள். ஒரே நேரத்தில் 5 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இதன் மூலம், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சத்துக்கும் மேற்பட்ட பென்ஷன்தாரர்களும் பயனடைவார்கள். இந்த 17 சதவீதம் ஜூலை மாத முன் தேதியை கணக்கிட்டு வழங்கப்படும். இந்த உயர்வால் மத்திய அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி கூடுதலாக செலவாகும். தீபாவளி நேரத்தில் அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பு, அரசு ஊழியர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தரும். மேலும், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.6,000 நிதி உதவி பெற ஆதாரை இணைப்பதற்கான கெடு நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த கால நீட்டிப்பு, வரும் ரபி பருவ பயிர்காலத்தையொட்டி விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே 7 கோடி விவசாயிகள் ஆண்டுக்கு 3 தவணையாக ரூ.6,000 நிதி உதவி பெற்று பயனடைந்து வருகின்றனர்.