×

தீபாவளியை முன்னிட்டு வரும் 26, 27-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை: 28ல் உள்ளூர் விடுமுறை அடிப்படையில் விடுப்பு...பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: வருகிற 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை ஒருநாள் தான் என்றாலும், அதற்கான ஏற்பாடுகள், சந்திப்புகள் என 2 ,3 நாட்களுக்கு கொண்டாட்டங்கள்  நீடித்திருக்கும். ஞாயிற்றுக்கிழமை அன்று தீபாவளி கொண்டாடப்பட உள்ளதால் தீபாவளிக்கு முந்தைய நாளும் பிந்தைய நாளும், வேலை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு நேற்று வெளியிட்டுள்ள  அறிக்கையில், கடந்த ஆண்டு தீபாவளிக்கு ஏறக்குறைய 5 நாட்கள் விடுமுறை விடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு விடுமுறை இல்லாத ஒரு சூழலை பள்ளிக்கல்வித்துறை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை வேலை நாளாக இருந்தால் மாணவர் வருகையும் குறைவாகவே இருக்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டது. இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமை  பள்ளி வேலை நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வெளியூர் செல்லும் மாணவர்களின் நலன் கருதி விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

26 மற்றும் 27ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தீபாவளி முடிந்த அடுத்த நாளான 28ம் தேதி திங்கட்கிழமை பள்ளி வேலை நாள் என்பதால் விடுமுறை தேவைப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மாவட்ட  முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்று உள்ளூர் விடுமுறை என்ற அடிப்படையில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. அவ்வாறு விடுமுறை எடுக்கும் பள்ளிகள் அதற்கு பதிலாக  சனிக்கிழமை வேலை நாட்களாக செயல்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Schools ,Holidays ,Diwali on Schools , Holidays for schools on the 26th and 27th of Diwali
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...