சென்னை: புதிய மின் இணைப்பு கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கம்யூனிஸ்ட்டுகள் வலியுறுத்தி உள்ளனர். முத்தரசன் (இ.கம்யூ): மத்திய அரசு பின்பற்றும் மக்கள் விரோத பொருளாதார கொள்கையின் காரணமாக மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர். வேலையின்மை அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசின் கொள்கைகள் காரணமாக மோட்டார் வாகன தொழில் உட்பட பல்வேறு தொழில்கள் தொடர்ந்து மூடப்பட்டு லட்சக்கணக்கில் தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். இத்தகைய நெருக்கடிகளை மத்திய - மாநில அரசுகள் மக்களுக்கு தொடர்ந்து நெருக்கடியை கொடுப்பது போதாது என்று, தற்போது தமிழ்நாடு அரசு புதிய மின்இணைப்புக்கான கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி இருப்பது கண்டனத்திற்குரியதாகும். கட்டண உயர்வு குறித்து மின்வாரியம் இணைய தளத்தில் வெளியிட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு மேலும் மேலும் சுமையை அதிகரிக்கும் மின்கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும்.