டெல்லி: ஆதார், வாக்காளர் அடையாள அட்டை எண், பான் கார்டு உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய குடியுரிமை அட்டை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்திற்கு புதிய கட்டடம் திறப்பு விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதிய கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.
அப்போது, அரசு திட்டங்களின் நன்மைகள் மக்களை சென்றடையவே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது சலிப்பான பயிற்சி அல்ல என்றார். பாஸ்போர்ட், வங்கி கணக்கு, டிரைவிங் லைசென்ஸ், ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து விதமான ஆவணங்களையும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் திறன் கொண்டதாக டிஜிட்டல் கணக்கெடுப்பு இருக்கும் என்றார்.
2021-க்குள் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மொபைல் செயலிகள் பயன்படுத்தப்படும், காகித மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான மாற்றமாக இது இருக்கும். தேசிய மக்கள் தொகை பதிவு என்பது நாட்டில் உள்ள பல பிரச்னைகளை தீர்க்க மத்திய அரசுக்கு உதவும் என்றார். 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த தகவல்கள் மற்றும் அறிக்கை 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை விட மிகக் குறைந்த காலகட்டத்தில் வெளியிடப்படும் என்றும் கூறினார். 2021-ம் ஆண்டு நடக்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புக்காகவும், தேசிய குடியுரிமை பதிவேடு தயாரிக்கவும் ரூ. 12 ஆயிரம் கோடி செலவிடப்பட உள்ளதாக தெரிவித்தார்.