பாட்னா: ஸொமேட்டோவில் 100 ரூபாய் கட்டணத்தை திரும்பப் பெற நினைத்த பொறியாளர் ஒருவர் போலி கஸ்டமர் கேரிடம் சிக்கி 77 ஆயிரம் ரூபாயை பறிகொடுத்துவிட்டு காவல்நிலையத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார். கடந்த 10-ம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள விஷ்ணு என்ற பொறியாளர் தனக்கான உணவை ஸொமெட்டோ என்ற ஆன்லைன் உணவு டெலிவரி ஆப் மூலம் ஆர்டர் செய்தார். ஆனால் தனக்கு வந்த உணவு மோசமான நிலையில் இருந்ததால், அதை டெலிவரி கொண்டுவந்த இளைஞரிடமே திருப்பி அளித்தார். அந்த இளைஞர் ஏற்க மறுத்தபோது, தன் பணம் தனக்கு திரும்ப வேண்டும் என விஷ்ணு வாதிட்டார். கூகுளில் ஸொமேட்டோ வாடிக்கையாளர் சேவை மையம் எனத் தேடினால் வரும் முதல் எண்ணுக்கு அழைத்தால் அவர்களே தங்கள் பணத்தை தங்களது வங்கி கணக்கில் செலுத்தி விடுவார்கள் எனக் கூறிவிட்டு சென்றதாக விஷ்ணு கூறினார்.