சேலம்: சேலம் உள்பட 5 ரயில்வே ஸ்டேஷன்கள், 6 ரயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில், ரேஷன் அரிசி கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்துக்கு 2 நாட்களுக்கு முன், மணிவேல் என்பவரது பெயரில் ஒரு கடிதம் வந்தது. அதில், சேலம், ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்களிலும், சென்னை-கோவை இன்டர்சிட்டி, வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ், பழனி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 6 ரயில்களிலும் வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுபற்றி சேலம் ரயில்வே போலீசில் அதிகாரிகள் புகார் செய்தனர். டிஎஸ்பி பாபு தலைமையிலான போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அக்கடிதத்தில் ஒரு ஆம்னி வேன் எண்ணை குறிப்பிட்டு அதில்தான், வெடிகுண்டுகளை நிரப்பி வந்து வெடிக்கச் செய்வோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த எண்ணை கொண்டு விசாரித்ததில், அது நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை சேர்ந்த பிரபல ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் தலைவன் மணிவேலின் (50), ஆம்னி வேன் என தெரியவந்தது.