சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்டோமொபைல் டீலர்கள் சங்க கூட்டமைப்பின் செயலாளர் சகர்ஸ்தமானி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:தொழிற்சாலைகள் புதிய மாடல் வாகனங்களை (இருசக்கரம், நான்கு சக்கரம் மற்றும் கனரக வாகனங்கள்) உற்பத்தி செய்யும்போது அந்த வாகனம் தொடர்பான அனைத்து தகவல்களையும் ‘வாகன் நிக்’ என்ற மத்திய அரசின் இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த தகவல்களின் அடிப்படையில் தேசிய சோதனை முகமை அந்த வாகனத்தை ஆய்வு செய்து ஒப்புதல் தந்து வாகன் நிக் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும். இந்த தகவல்களின் அடிப்படையில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வாகனங்களை வாங்குபவர்களுக்கு உடனுக்குடன் வாகனப் பதிவு செய்யப்படுகிறது.வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கும் இதே நடைமுறைதான் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் இதற்கு நேர் எதிரான நிலை உள்ளது. புதிய மாடல் வாகனங்களை உற்பத்தி செய்யும்போது அந்த மாடல் வாகனங்களுக்கு போக்குவரத்து ஆணையரின் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் கட்டணமாக ₹10 ஆயிரம் செலுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு மோட்டார் வாகன சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவந்து கடந்த மே 9ம் தேதி அரசாணையை வெளியிட்டது.