சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிக்கு அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மக்கள் நீதி மய்யம் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை புறக்கணித்தது. எனவே, அந்த கட்சி சார்பில் 2 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுமா, இல்லையா என்ற சந்தேகம் இருந்தது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மக்களின் எண்ணப்படி 2021ல் ஆட்சி பொறுப்பினை மக்களின் பேராதரவுடன் கைப்பற்றி மக்களாட்சிக்கு வழிவகுக்கும் முனைப்போடு மக்கள் நீதி மய்யம் கட்சி விரைவாக முன்னேறி வருகிறது. நாங்குநேரியிலும், விக்கிரவாண்டியிலும் தங்கள் தலைவர்களையும் அவர்களின் தலைப்பாகைகளையுமாவது தக்க வைத்து கொள்ளலாம் என்கிற எண்ணத்துடன் ஆள்பவர் போடும் இடைத்தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கெடுக்காது.