சென்னை: விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவோர் இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார், கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் நாங்குநேரி தொகுதி காலியிடமாக அறிவிக்கப்பட்டது. அதேபோன்று, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ராதாமணி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி மரணம் அடைந்தார். இதனால் இந்த தொகுதியும் காலியாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.இந்த நிலையில் இந்த 2 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 30ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். தொடர்ந்து அக்டோபர் 1ம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். அக்டோபர் 3ம் தேதி வரை வேட்புமனுக்களை வாபஸ் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.